சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறவுள்ளதை நேற்றைய தினம் 28 நாள் திருவிழா துவங்கியது. இதனையொட்டி ஞாயிறு கிழமைகளில் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் நடைப்பயணமாகவும், வாகனங்கள் மூலமாக தாங்கள் எடுத்து வந்த பூக்களை மாரியம்மனுக்கு அளித்து தரிசனம் செய்வார்கள்.. பூச்சொரிதல் விழாவையொட்டி சென்னை பை பாஸ் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
அந்த வகையில் நேற்றைய தினமும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றத்தில் குளறுபடி ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை பைபாஸ் ரோட்டில் 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு வரை தொடர்ந்தது.. இதனால் சென்னை செல்ல வேண்டிய பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். பை பாஸ் வழியாக சென்று அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டிய டூவீலர்வாசிகளும் மணிக்கணக்காக காத்திருந்தனர். இது போன்று வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது..