திருநெல்வேலிக்கே அல்வாவா? என்ற பேச்சு வழக்கு தமிழ்நாட்டில் சொலவடையாக சொல்லப்பட்டு வருகிறது. யாராவது நம்மை ஏமாற்ற நினைத்தால் இந்த வாசகத்தை கூறுவார்கள். ஆனால் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் தருகிறோம் , தருகிறோம் என கூறி வந்த மத்திய அரசு திருநெல்வேலிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே அல்வா கொடுத்து விட்டது.
மத்திய அரசு கொடுத்த அல்வாவை கண்டித்து இன்று டில்லியில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு செய்த துரோகத்தை மக்களிடம் வெளிப்படுத்தும் வகையில் திமுகவினர் இன்று சென்னை கிளாம்பாக்கம், நெல்லை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகளுக்கு மத்திய அரசை போல அல்லாமல், உண்மையிலேயே அல்வா கொடுத்தனர்.
சிறிய பாக்கெட்களில் அடைக்கப்பட்ட அல்வாவை திமுக நிர்வாகிகள் பயணிகளுக்கு கொடுத்தனர். இன்று என்ன விசேஷம், எதற்காக அல்வா என பயணிகள் ஆர்வத்துடன் கேட்டனர். மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் தராமல், ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் அல்வா கொடுத்து விட்டது. அதை மக்களிடம் தெரிவிக்கவே உண்மையான அல்வா கொடுக்கிறோம் என்றனர்.
அதை அமோதித்த மக்கள் அல்வாவை பெற்றுக்கொண்டதுடன், தேர்தலில் தமிழ் மக்களும் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு அவர்கள் பாணியிலேயே அல்வா கொடுத்து விடுவார்கள் என்றனர்.