2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மலர்விழி. தற்போது இவர் சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார். இவர் கலெக்டராக இருந்தபோது ரசீது புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக ரூ.40 மதிப்புள்ள புத்தகங்கள் ரூ.135க்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் மட்டும் ரூ.1.32கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பேரில் இன்று சென்னையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மலர்விழி மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
இதுபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் கடுக்காய் கிராமத்தில் அரசு கான்ட்ராக்டர் பழனிவேல் இல்லம் உள்பட 3 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இவர் அதிமுக ஆட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு பிளீச்சிங் பவுடர் சப்ளை செய்ததில் முறைகேடு செய்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடக்கிறது.