வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.2023 அன்றைய தேதியில் ஐந்து வருடம் முடிவடைந்த முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு (+2), பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர்.
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு (+2) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.09.2023 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர்.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பிரிவினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பொதுப்பிரிவினர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை(SSL.C-Failed) ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர்(SSLC-Passed) ரூ.300, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றோர்(HSC-Passed) ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(DEGREE-Passed) ரூ.600, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் எழுதப்படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ரூ.600, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றோர் (HSC-Passed) ரூ. 750,பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றோர் (DEGREE-Passed) ரூ. 1000 வழங்கப்படும். ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவாகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு (ENGINEERING), மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்க இயலாது.
மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அரல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகைபுரிந்து, விண்ணப்பப்படிவத்தை தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.