பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரளி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 04 ஏக்கர் இடத்தில் பாதாம், நாவல், ஆலம், புங்கன், அத்தி மற்றும் வாகை உள்ளிட்ட ஆறு வகையான 1000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (20.01.2024) மரக்கன்றை நட்டு வைத்து தொடங்கிவைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு மரக்கன்றுகள் நடும் பணிகளை ஒரு இயக்கமாகவே மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது. இன்று வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள பேரளி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 04 ஏக்கர் நிலத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார். முதற்கட்டமாக இன்று 120 மரக்கன்றுகள் நடப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் பணிகளை முடிந்தவுடன் அப்படியே விட்டு விடாமல் மரக்கன்றுகளும் ஒரு உயிர்தான் என்பதை கருத்தில் கொண்டு, அவற்றை முறையாக பராமரித்து தேவையான தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகள்
மரமாகும் வரை முறையாக பராமரிக்க வேண்டும் என மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார் .
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களிலும், அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அந்த நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு அவற்றிலும் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களாகிய நீங்களும் உங்களால் முடிந்த அளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார், குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.