தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை பகுதி ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தில் அந்தோணியார் ஆலய சப்பரத் திருவிழா இரவு நடைபெற்றது. அப்போது போதையில் வந்த சிலர், சாலையை மறித்துக் கொண்டு தகராறு செய்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் (40) கத்தியால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். இதனால் சப்பரம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து காவல் துறைக்குக் கிராம மக்கள் புகார் செய்தனர். ஆனால் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
