பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் , தனது மகன் அன்புமணியை பாமக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியதுடன், அவர் இனி செயல் தலைவர் தான் என்றும் அறிவித்தார். ஆனால் அன்புமணி அதனை ஏற்கவில்லை.
பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் நான், என்னை பொதுக்குழு தான் நீக்கமுடியும் என ராமதாசுக்கு பதிலளித்தார் அன்புமணி.
இந்த நிலையில் இருவரும் தனித்தனியாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இதனால் பாமகவில் உள்கட்சி பிரச்னை பெரிதாக உள்ளது.
இந்த நிலையில் இன்று கரூர் மாவட்ட பாமக செயலாளர் பி.எம்.கே பாஸ்கரனை, அந்த பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கி உள்ளார்.
கரூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எம்.கே பாஸ்கரன் என்பவர் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அன்புமணி ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.
