பஞ்சாப் மாநிலம் லூதியான தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குர்பிரீத் சிங் கோகி மறைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானது. அதே போல், மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நஸிருதீன் அகமது உயிரிழந்தார்.
குஜராத் மாநிலத்தின் காடி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. கர்சான்பாய் சோலங்கி உயிரிழந்ததால் அந்த தொகுதி காலியானது. குஜ்ராத் மாநிலத்தில் உள்ள மற்றொரு தொகுதியான விஸாவதர் தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பயானி பூபேந்திரபாய், தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.கவில் இணைந்தார்.
இதனால், அந்த தொகுதியும் காலியானது. கேரளா மாநிலம் நிலாம்பூர் தொகுதியில் இடதுசாரி ஆதரவுடன் வெற்றி பெற்ற பி.வி.அன்வர், தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்தார். இதனால், அந்த தொகுதி காலியானது.
இதனால் மேற்கண்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இன்று காலை அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது.
கேரளாவில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. இதுபோல பஞ்சாபில் ஆத் ஆத்மி முன்னணியில் உள்ளது. அதே நேரத்தில் பாஜக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. குஜராத் மாநிலம் விஸாவதர் தொகுதியில் ஆம் ஆத்மியும், இன்னொரு தொகுதியான காடியில் பாஜகவும் முன்னணியில் உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.
5 தொகுதி இடைத்தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் தான் பாஜக முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம் நிலாம்பூர் தொகுதியில் பாஜக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆளும் மார்க்சிய கம்யூ. வேட்பாளர் 2ம் இடத்தில் உள்ளார்.