Skip to content

கரூர் திமுக முப்பெரும் விழா… முதல்வர் வருகையை ஒட்டி… போலீசார் பலத்த பாதுகாப்பு

கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக ஏற்பாடு: முதல்வர், துணை முதல்வர் வருகையை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்பு பணி.

தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை ஒன்றிணைத்து இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வரவேற்று பேசுகிறார். பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

விழாவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி

சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவுக்காக கோடங்கிபட்டி பகுதியில் 50 ஏக்கர் நிலத்தில் பத்து நாட்களுக்கு முன்பு பந்த கால் நடப்பட்டு, 200 அடி அகலம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமான மேடை, ஒரு லட்சம் நபர்கள் அமர்வதற்கு இருக்கைகள், வாழை மர தோரணங்கள், தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் 67 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஒரே மாதிரியான டீ சர்ட் சீருடையுலும், இளம்பெண்கள் ஒரே மாதிரியான சுடிதார் உடையிலும், பெண்கள் ஒரே மாதிரியான புடவையிலும், ஆண்கள் ஒரே மாதிரியான கட்சி வேட்டி சட்டையிலும் கலந்து கொள்கிறார்.

விழாவில் பங்கேற்கும் முதல்வர் விமானம் மூலம் திருச்சி வருகை தந்து அங்கு உறுதிமொழி ஏற்ற பின் அங்கிருந்து கார் மூலம் கரூர் வருகை தருகிறார். கரூர் தான்தோன்றி மலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு புறப்பட்டு முப்பெரும் விழா நடைபெறும் மேடைக்கு வருகை தர உள்ளார். முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் வருகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழா கோலம் போல் காட்சி அளிக்கிறது.

அதே போல் வாழை தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கட்சி கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதல்வரின் வருகையொட்டி கரூரில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தை பொருத்தவரை செந்தில் பாலாஜி என்றாலே பிரம்மாண்டம் என்று முதல்வர் கூறி வரும் நிலையில் தற்போது திமுக முப்பெரும் விழா கரூரில் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு பணிகள் மிக பிரம்மாண்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

error: Content is protected !!