இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சக வீரர்கள் மட்டுமின்றி, தலைமைப்ப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் அந்த தருணத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு எதிரான, டெஸ்ட் தொடர் தோல்விகளுக்குப் பிறகு கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கான முற்றுப்புள்ளியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 96 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றி அமைந்துள்ளது. இதன் மூலம் மூன்று முறை டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கவுதம் கம்பீர், சமூக வலைதளங்களில் நிலவும் தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் தந்தார். அதன்படி, “நான் பதிலளிக்க வேண்டியது சமூக வலைதளங்களில் வசிப்பவர்களுக்கு அல்ல. எனது நம்பகத்தன்மையானது என்னுடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் அந்த 30 பேருக்கு தான். அணியை பொறுத்தே பயிற்சியாளரும் சிறந்தவராக மாற முடியும். என்னை இப்போதுள்ள பயிற்சியாளராக மாற்றியது எனது அணி தான்” என கம்பீர் பதிலளித்தார். வரலாற்றின் பல மோசமான தோல்விகளை கண்டதால், கம்பீரை பதவியில் இருந்து நீங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தும் சூழலில் அவர் இந்த பதிலை அளித்துள்ளார்.
இரண்டு வீரர்களுக்கு சமர்ப்பணம்
மகிழ்ச்சியான தருணத்தில் இரண்டு முக்கியமான நபர்களை குறிப்பிட்டு, இந்த உலகக் கோப்பையை அவர்களுக்கு சமர்பிப்பதாக தெரிவித்தார். அது, 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற தலைமைப் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் மற்றும் இளம் திறமையாளர்களை கண்டறிந்து மேம்படுத்தும் பிசிசிஐ பிரிவின் தலைவர் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோராகும். அவர்கள் குறித்து பேசுகையில், “இந்த டி20 உலகக் கோப்பையை ராகுல் ட்ராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோருக்கு சமர்பிக்கிறேன். இந்திய அணி தற்போதுள்ள நிலையை எட்டிய ட்ராவிட் அண்ணாவிற்கும், அணிக்கான எதிர்காலத்தை கட்டமைத்து வரும் லட்சுமணனிற்கும் இந்த விருதை சமர்பிக்கிறேன்” என கம்பீர் பேசினார்.
தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் ஐசிசி தலைவரான ஜெய் ஷா ஆகியோருக்கும் கம்பீர் நன்றி தெரிவித்தார். அதன்படி, “நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டாலும் நேர்மையாகவும் கடினமாகவும் உழைத்த அஜித் அகர்கருக்கும், ஜெய் ஷா அண்ணாவிற்கும் நன்றி. சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களில் தோல்வியுற்ற பிறகு நிலவிய இக்கட்டான சூழலில் ஜெய் ஷா என்னை தொடர்பு கொண்டு பேசினார். தோல்வி பயத்தை நாம் விட்டுவிட வேண்டும். பழமைவாத கிரிக்கெட்டை விளையாடுவதை விட, 120 ரன்களுக்கு அவுட்டாகிவிடுவது பரவாயில்லை. தைரியமாகவும் துணிச்சலுடன் இருந்ததால் தான் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் 250 ரன்கள் எடுக்க முடிந்தது” என கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.

