திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் வந்திறங்கின. திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் விஜயகுமாரி, திருப்போரூர் வட்டாட்சியர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்ட லாரியின் பின்புற கதவில் வைக்கப்பட்டிருந்த சீல் உடைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டன. திருப் போரூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் 442 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 442 கட்டுப்பாட்டு கருவிகள், 479 சரிபார்க்கும் (விவி பேட்) கருவிகள் என 1363 இயந்திரங்கள் வந்துள்ளன. இந்த இயந்திரங்கள் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 369 வாக்குச்சாவடி மையங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வரிசை எண்ணின்படி அடுக்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை அனைத்துக்கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
