மிட்டூர் பகுதியில் அரசு மதுபான கடையில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்க சமூக விரோதிகளுக்கு மொத்தமாக மதுபாட்டில்களை சப்ளை செய்யும் மதுபான கடை பணியாளர்கள்! சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்!
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறை விற்பனை கடைகளிலிருந்து மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபான விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
இருந்த போதும் தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் மதுபானம் இறங்கிய உடனே 130 முதல் 200 ரூபாய் வரையிலான மது பாட்டில்களை கள்ளத்தனமாக சமூக விரோதிகளுக்கு மதுபான கடை பணியாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் பணியாளர் மதுபான கடைக்கு வரும் 130 மற்றும் 200 மதிப்பிலான மது பாட்டில்களை கள்ளத்தனமாக சமூக விரோதிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் மதுபானக் கடைக்கு இறங்கும் மது பாட்டில்களை உடனடியாக கள்ளத்தனமாக வெளிநபர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் செயலிலும் ஈடுபட்டு வருவதால் விலை குறைந்த மது பாட்டில்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என மது பிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக இன்று மதுபான கடைக்கு சென்ற மது பிரியர் ஒருவர் கேட்ட மது பாட்டில் கிடைக்காத காரணத்தால் கள்ளத்தனமாக மது பாட்டிலை மொத்தமாக மூட்டையாக கட்டி விற்பனை செய்யும் நிகழ்வை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ செய்துள்ளார்.
மேலும் இதே போல் தொடர்ந்து இந்த குற்ற செயல்களிலும் இருவரும் ஈடுபட்டுவதாகவும்ஸஇவர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மது பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
