மருத்துவ அடிப்படையிலான மருந்துகள் என்று கூறி போலியாக விற்பனை செய்வதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக புகார்கள் குவிந்தன. இதனை ஏற்கனவே கண்டித்து இருந்த உச்சநீதிமன்றம், எந்த அடிப்படையில் இது விஞ்ஞான பூர்வ மருந்து என்று கேள்வி எழுப்பியது.
உச்சநீதிமன்றம் எச்சரித்தும் இதே பாணியில் விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு வந்தது. இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான நீதிபதிகள் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் கூறியிருந்தனர்.
நீதிபதிகள் ஹிமா கோலி, அசனுதீன் அமனுல்லா அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீதிபதிகள் முன்பு ராம்தேவ் நேரில் வந்து மன்னிப்பு கோரியதாக குறிப்பிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ராம்தேவின் மன்னிப்பை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். இதேபோல் நீதிபதிகளை மட்டும் பதஞ்சலி நிறுவனம் அவமதிக்கவில்லை அதேநேரம் ஒட்டுமொத்த நீதித்துறையையே அவமதிப்பதாக தெரிவித்தனர்.
உண்மைக்கு புறம்பான விளம்பரங்களை வெளியிட்ட நிலையில் அது தொடர்பான வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்றும் உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. பாபா ராம்தேவ் நிறைய யோகாசனங்கள் செய்திருக்கலாம். ஆனால் அதற்காக பிற மருத்துவ முறைகளை அவர் அலட்சியப்படுத்தக் கூடாது என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இரு கைகளையும் கூப்பி தவறான விளம்பரங்களுக்கு மன்னிப்பு கோரினார். அதைத்தொடர்ந்து வழக்கு வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.