திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில்வே பாலத்தின் தூண் அருகே உள்ள சுவர் அதிகமான நீர் கசிவு காரணமாக ஒருபுறமாக உப்பிக்கொண்டு வெளியே சரியும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பொன்மலை ரயில்வேயில் கீ மேனாக பணியாற்றும் பவுல்ராஜ்(35) என்பவர் ரயில்வே தண்டவாளத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த ரயில்வே பாலத்தின் அடியில் நடந்து சென்ற அவர் பாலம் உப்பி இருப்பதை பார்த்து உடனடியாக தனது துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் வந்து பார்த்தனர். சேதம் அடைந்துள்ள பாலம், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து போக்குவரத்தை மாற்றி அமைத்து உள்ளனர்.
பாலத்தின் சேதத்தை முதன் முதலில் கண்டுபிடித்து பெரிய விபத்து ஏற்படுவதை தடுத்த பவுல்ராஜ் இ தமிழ் நியூசிடம் கூறியதாவது:
11ம் தேதி காலை 9.45 மணிக்கு அந்த ரயில்வே பாலத்தின் அடியில் நான் தண்டவாளத்தை ஆய்வு செய்தபடி நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது பாலத்தின் சுவர் சரிந்து விழுவது போல உப்பிக்கொண்டு இருந்தது. கனரக வாகனங்கள் தொடர்ந்து வந்தால் அந்த சுவர் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக உணர்ந்து கொண்டேன். உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்தேன்.
பாலம் தொடர்ந்து கவனிக்கப்படாமல் இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். அதற்குள் கண்டுபிடித்தது மனதுக்கு ஆறுதலை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.