தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் சிஐடியூ மற்றும் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் 6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நேற்று ஸ்டிரைக்கில் குதித்தது. இந்த நிலையில் ஸ்டிரைக் செய்ய தடை விதிக்க கோரி வக்கீல் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நேரத்தில் ஸ்டிரைக் தேவையா? ஏன் அரசும், தொழிற்சங்கமும் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என கோர்ட் கேட்டது.
பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், 7 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் நலனை விட ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நலனில் அரசு அக்கறை கொண்டு செயல்படுகிறது , ஸ்டிரைக் வன்முறையை நோக்கி செல்கிறது, தொழிலாளர்களின் கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பண்டிகை நேரத்தில் வேலை நிறுத்தம் செய்வது, மக்களை பணயகைதியாக வைத்து போராடுவது போல என கோர்ட் கருத்து தெரிவித்தது.
இந்த நிலையில் ஸ்டிரைக்கை தற்காலிகமாக 19ம் தேதி வரை நிறுத்திக்கொள்வதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். இந்த தகவலை தொழிற்சங்கத்தினர் ஐகோர்ட்டில் தெரிவித்தனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை என அரசு அறிவித்தது. நீதிமன்ற அறிவுறுத்தல்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.