திருச்சி ராம்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இன்று மருது சகோதரர்கள் நினைவு நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு கவர்னர் ரவி கலந்து கொண்டு மருது சகோதரர்கள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கவர்னர் பேசியதாவது:
அக்டோபர் 2ம் தேதி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அரசு நடத்திய புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டேன். அதில் பெரும்பாலான சுதந்திர போராட்ட தியாகிகள் படங்கள் இல்லை. மறைக்கப்பட்டு இருக்கிறது. நான் இதற்கு முன் நாகலாந்து கவர்னராக இருந்தேன். அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளனர். நான் தமிழகம் வந்தபோது இங்குள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் பட்டியலை கேட்டபோது 40க்கும் குறைவானவர்கள் பெயர் பட்டியல் தான் தரப்பட்டது.
பிரித்தாளும் கொள்கைக்காக அனுப்பப்பட கால்டுவெல்லை திராவிட கருத்தியலின் தந்தை என்று போற்றுகிறார்கள். பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட ராபர்ட் கால்டுவெல் தான் திராவிடம் என்றும் பிரித்துக்கூறியவர். இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல்போன்றவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். தமிழ்நாடு புண்ணிய பூமி; இங்கு ஆரியம் – திராவிடம் கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.