அரியலூர் மாவட்டம் செட்டி திருக்கோணம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி, அவரது மனைவி செல்வம்பாளுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வளைக்காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள V.கைகாட்டியிலிருந்து காட்டுபிரிங்கியம் சென்று கொண்டிருந்தார். கடுங்காலி கொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, வலது பக்கம் சட்டென்று திரும்பி உள்ளார்.
அப்போது பின்னால் நெய்வேலியை சேர்ந்த இசக்கிமுத்து ஓட்டி வந்த கார், எதிர்பாராத விதமாக மோதியதில் படுகாயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பொழுது இசக்கிமுத்து ஓட்டி வந்த காருக்கு பின்னால், சிதம்பரத்தை சேர்ந்த ஜெயக்குமார் ஓட்டி வந்த கார் மோதாமல் இருக்க வலது பக்கம் திரும்பிய போது,
எதிரில் ஜெயங்கொண்டம் நோக்கி செந்துறையை சேர்ந்த அறிவொளி ஓட்டி சென்ற கார் மீது பயங்கர வேகத்தில் மோதியதில் அறிவொளி ஓட்டி வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் உடனே இறங்கியதால், உயிர் பலி தவிர்க்கப்பட்டது. சம்பவத்தை அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ராமசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காரின் மீது தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டு, தீ கட்டுப்படுத்தப்பட்டது. விபத்து குறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.