நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா திறந்த தண்ணீர் காவிரி ஆற்றில் வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் போதுமான அளவிற்கு வந்துகொண்டிருக்கிறது எனக் கூறமுடியாது. கர்நாடகாவில் இருந்து 12,500 கனஅடி நீர் திறக்க இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்துவோம். ஆற்றின் கடைமடைப் பகுதிக்கே முன்னுரிமை தரவேண்டும் என்ற விதியை கர்நாடகா பின்பற்ற மறுக்கிறது. காவிரி நீர் திறப்பு தொடர்பான உத்தரவுகள் எதையும் கர்நாடகா பின்பற்றுவதில்லை.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கூட கர்நாடகா மதிப்பதில்லை. கர்நாடக மாநில அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருந்தும் அதை திறக்க மறுக்கிறார்கள். ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துடன் நட்புறவுடன் நடந்து கொள்வது அவசியம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.