அமைச்சர் பொன்முடி வீடு உள்பட 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு பொன்முடி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு 8 மணி முதல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை இன்று அதிகாலை 3 மணிக்கு முடிந்தது. பின்னர் அமைச்சர் பொன்முடி வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று காலை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி வீட்டுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, சட்ட அமைச்சர் ரகுபதி, கணேசன் , திமுக எம்.பி. ஆ ராசா உள்ளிட்ட பலர் வந்தனர். அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே பெங்களூரில் உள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடியுடன் பேசி, அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்தார். துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் வழக்கை எதிர்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.
ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் கழகம் என்றும் துணை நிற்கும் என பொன்முடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.