2024 ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற வேண்டும். ஒருவேளை டிசம்பர் மாதமே தேர்தல் நடத்தப்படலாம் என்ற யூகங்களும் பரவலாக நிலவுகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து திமுக இன்று பேச்சுவார்த்தையை தொடங்குகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது. இந்த கட்சியின் சார்பில் 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்று தற்போது எம்.பியாக உள்ளார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும், திமுக கூட்டணியில் முதன் முதலாக கூட்டணி பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்கும். அந்த வகையில் இன்று மாலை 4 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், சென்னையில் அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தொகுதி பங்கீடு குறித்து அப்போது விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதே நேரத்தில் இந்த முறை முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி இருக்காது. வேறு தொகுதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.