Skip to content
Home » திமுக நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை….. மா. செ. கூட்டத்தில் முதல்வர் வருத்தம்

திமுக நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை….. மா. செ. கூட்டத்தில் முதல்வர் வருத்தம்

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக இன்று காலை  நடந்தது.   சென்னை மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், நே.சிற்றரசு, மாதவரம் மூர்த்தி, இளைய அருணா உள்பட 72 மாவட்ட தி.மு.க. செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க  திமுகவினர் இப்போதே தயாராக வேண்டும். குறிப்பாக பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும். இல்லாத இடங்களில் உடனே அமைக்க வேண்டும். அனைத்து மாவட்ட செயலாளர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள பூத் கமிட்டிகளை ஆய்வு செய்ய வேண்டும். கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் அடிக்கடி கலந்துரையாடி பூத் அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். ஒரு சில மாவட்டங்களில் நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்ற தகவல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

கழகம் எல்லா தொண்டர்களுக்கும் பொதுவானது! நிர்வாகிகளுக்கு மட்டுமே கழகம் சொந்தம் இல்லை! ஆட்சி அனைவருக்கும் பொதுவானது! அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே ஆட்சி சொந்தமல்ல! கழகம் ஆட்சிக்கு வந்தபோது பேரறிஞர் அண்ணா மகிழ்ச்சி அடையவில்லை. வருத்தம்தான் பட்டார். இனி கட்சி என்ன ஆகும் என்று வருந்தினார். தலைவர் கலைஞர் அவர்கள்தான் கட்சியையும் ஆட்சியையும் ஒருசேர வளர்த்தெடுத்தார். அத்தகைய பாணியை நாமும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

ஆட்சியைப் பிடிக்க கட்சி பயன்பட வேண்டும்! கட்சியைப் பலப்படுத்த ஆட்சி துணைபுரிய வேண்டும் அதற்கு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக்கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர-கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகிய அனைவரும் ஒற்றைச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும். ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!