அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது. மேலும், தேர்தல் பத்திரங்கள் வாங்கும் நிறுவனங்கள், வாங்கும் கட்சிகளின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த விவரங்களை அளிக்க முடியாது என்றும் மத்திய அரசு தெரவித்துவந்தது. இந்த திட்டத்தின் மூலம் ஆளும் கட்சி பெரும் நிதி பெறுவதாகவும், ஆளும் கட்சிக்கு நிதி கொடுக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தியும், மிரட்டியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் கட்சி நிதி திரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், தேர்தல் பத்திர நன்கொடை திட்டம் ரத்து செய்யப்படுவதாக கடந்த மாதம் 15ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. ஸ்டேட் வங்கி வெளியிட்ட அந்த விபரங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அடுத்த சில நாட்களில் பல நூறு கோடிகளை கொட்டி தேர்தல் பத்திரங்களை வாங்கியிருப்பதும், பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய சில நாட்களிலேயே பல ஆயிரம் அல்லது பல நூறு கோடி ரூபாய்க்கு டெண்டர் பெற்று இருப்பதும் அம்பலமாகியுள்ளது. குறிப்பாக கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழில் அதிபர் மார்ட்டின் ரூ.1368 கோடி தேர்தல் பத்திரமாக வாங்கியுள்ளார். இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் பல முறை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. ஒவ்வொரு முறை சோதனை நடத்தப்பட்ட சில நாட்களில் அவர் பல நூறு கோடி ரூபாயாக தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளார். அதேபோல, அரபிந்தோ பார்மா என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் 2022ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனால் 15ம் தேதி பல நூறு கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. டாக்டர் ரெட்டிஸ் என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அடுத்த நான்கு நாட்களில் பல நூறு கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளார். அதேபால கலபத்ரு ப்ராஜெக்ட் என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அக்டோபர் மாதம் 10ம் தேதி அந்த நிறுவனம் பல நூறு கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்களை வாங்கியது. ஹீரோ மோட்டோ கார்ப் என்ற நிறுவனத்தில் 2022 மார்ச் 31ல் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இதனால் அக்டோபர் 10ம் தேதி தேர்தல் பத்திரங்களை அந்த நிறுவனம் வாங்கியது. மைக்ரோ லேப்ஸ் என்ற நிறுவனத்தில் 2022 ஜூலை 14ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதே ஆண்டு அக்டோபர் 10ம் தேதி தேர்தல் பத்திரங்களை அந்த நிறுவனம் பல நூறு கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் யசோதா மருத்துவமனையில் 2020 டிசம்பர் 26ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதனால் 2021 முதல் 2023 வரை தொடர்ந்து பல நூறு கோடி ரூபாயக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அதேபோல டோரென்ட் பவர் என்ற நிறுவனம் கடந்த ஜனவரி 10ம் தேதி தேர்தல் பத்திரத்தை பல நூறு கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதனால் 1540 கோடி ரூபாய்க்கான டெண்டர் அந்த நிறுவனத்தக்கு வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை மூலம் 41 நிறுவனங்களை மிரட்டி ரூ.2010 கோடி நிதியை பாஜ பெற்றுள்ளது. அதேபோல சீரம் நிறுவனத்துக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி மருந்து வாங்க ஒன்றிய அரசு ஆர்டர் கொடுத்தது. இதனால் அந்த நிறுவனம் பல நூறு கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது.