தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (49). இவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆக உள்ளர். இவரது மனைவி சுமதி(40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில், கண்ணனுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த சுமதி, கணவரை கண்டித்து அந்த பெண்ணுடனான தொடர்பை கைவிட கூறியுள்ளார். இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுமதி வீட்டில் இருந்து வெளியேறி அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கண்ணன், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சுமதியை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் போலீசார், சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். கள்ளக்காதலை கண்டித்த மனைவியை கணவர் இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.