மனிதர்களுக்கு ஏற்படும் மூட்டு தேய்மானத்திற்காக உலோகத்தால் தயாரிக்கப்படும் செயற்கை மூட்டுகளைக் கொண்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேருக்கு இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. உலோகம் கொண்டு தயாரிக்கப்படும் மூட்டுகளால் மிக சிறிய அளவு தேய்மானம் ஏற்பட்டு, அதனால் மீண்டும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலை வரலாம், இதில் சிலருக்கு உலோகம் அலர்ஜி இருப்பதால் இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமற்றதாக இருந்தது. இந்த நிலையில் ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் கூடிய செராமிக் மூலக்கூறு கொண்டு உருவாக்கப்பட்ட மூட்டு கொண்டு, கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 64 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவருக்கு வெற்றிகரமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
இது குறித்து மருத்துவர் ராஜசேகரன் கூறும்போது… ஜெர்மனி நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக செராமிக் மூலக்கூறில் தயாரிக்கப்படும் மூட்டுகள் பொதுமக்களுக்கு பொருத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. மேலும் உலோகத்திற்கு மாற்றாக இந்தியாவில் முதல் முறையாக செராமிக் மூலக்கூறு கொண்டு தயாரிக்கப்பட்ட மூட்டை அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த மூட்டு பொருத்துவதன் மூலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் இயல்பாக மக்கள் இருக்கலாம். மூட்டு தேய்மானம் ஏற்படும்போது 60 வயதில் அறுவை சிகிச்சையின் மூலம் மாற்றிக் கொள்ளும்போது மிக எளிதாக இருக்கும் என தெரிவித்தார்.