ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவித்திருந்தது. அதன்படி, பிப்ரவரி 15 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டது.
இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினரை அழைத்து அமைச்சா்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து, அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை சற்று அதிகமாகியுள்ளதாகவும், நிதி நிலை சீரானவுடன் விரைவில் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில், அமைச்சர்கள் உடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசு மற்றும் அதன் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்ரவரி-14) சந்தித்து பேசினர். அப்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் பணிக்கு வராமல் இருந்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.