கரூரில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழப்பு விவகாரம்: பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து ஆஜராகி வருகின்றனர்.
கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூர் சிபிஐ முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் வருகை தந்து ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் தவெக பரப்புரையில் உயிரிழப்பின் போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் சிகிச்சை அளித்த மற்றும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் 5 பேர் நேற்று சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராகினர்.
இன்று இரண்டாவது நாளாக பிரேத பரிசோதனை செய்த அரசு டாக்டர்கள் 4 பேர் சிபிஐ அலுவலகத்திற்கு ஆஜராகி உள்ளனர். குறிப்பாக பிரேத பரிசோதனை விவரங்கள் அடங்கிய ஆவணங்களை கையில் எடுத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவர்களிடம் பிரேத பரிசோதனை செய்த போது எத்தனை டேபிள்கள் இருந்தது எத்தனை மணிக்கு தொடங்கினீர்கள்? எத்தனை மணிக்கு முடித்தீர்கள்? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இதேபோல் ஏ.டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், மற்றும் 2 நபர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

