Skip to content
Home » கோவையில் போக்சோவில் கைதான ஆசிரியர்கள்… தட்டி கழித்த பள்ளி நிர்வாகம்.. போலீஸ் கமிஷனர்..

கோவையில் போக்சோவில் கைதான ஆசிரியர்கள்… தட்டி கழித்த பள்ளி நிர்வாகம்.. போலீஸ் கமிஷனர்..

கோவை மாநகர காவல்துறையினர் தனியார் அமைப்புடன் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை துவக்கி உள்ளனர். மேலும் க்யூஆர் கோடு மூலம் பெண்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இது கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துணை காவல் ஆணையாளர் சந்தீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,கோவை மாநகர காவல் துறை சார்பில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு தொடர்பாக பார்க் இன்ஸ்டிடியூஷன் என்ற தனியார் அமைப்புடன் இணைந்து டிஜிட்டல் கையெழுத்து இயக்கம் இன்று துவங்கப்பட்டுள்ளது எனவும் இதில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இது குறித்து உறுதிமொழி எடுப்பதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் கோவை மாநகரில் இரவு நேரங்களில் பணிகளுக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என கூறிய அவர் இதனை மேலும் அதிகபடுத்துவதற்கு பெண்களின் கருத்துக்களை கேட்டறிய டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோடு ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இந்தக் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து அதில் கருத்துக்கள் தெரிவித்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்றார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

போலிஸ் அக்கா என்ற திட்டம் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம் என தெரிவித்தார். மேலும் பள்ளிகளுக்குச் சென்று போலீசார் பாலியல் குற்றங்கள் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்த அவர் ஒரு சில தனியார் பள்ளிகள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி காவலர்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அனுமதிப்பதில்லை என புகார்கள் வந்துள்ளதாக கூறினார். எனவே பாலியல் குற்றங்கள் தொடர்பாக பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவலர்கள் வரும்பொழுது ஒத்துழைப்பு நல்குமாறு அறிவுறுத்தினார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் காவலர்கள் பலமுறை பள்ளிக்குச் சென்ற போதிலும் பள்ளி நிர்வாகிகள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி காவல்துறையினரை தட்டிக் கழித்ததாக தெரிகிறது எனவும் தற்பொழுது அந்த பள்ளியில் பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கக் கூடிய கடமை அந்தந்த பள்ளி நிர்வாகத்திற்கு உள்ளது அதனை எடுக்க தவறினால் ஏதேனும் சம்பவங்கள் நிகழும் பொழுது அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புகார்கள் வந்தால் உடனடியாக காவல் துறையினருக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் தெரிவிக்க வேண்டிய கடமை அந்தந்த பள்ளிகளுக்கு உள்ளது என கூறிய அவர் அவ்வாறு அதனை சொல்வதற்கு தவறினால் அந்த குற்றங்களை மறைப்பதற்கு உதவுவதாக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

அண்மையில் கோவையில் நடைபெற்ற அந்த பள்ளி சம்பவம் குறித்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது எனவும் ஏற்கனவே அவர்களுக்கு இது குறித்து தெரிவித்து, ஆனால் காவல்துறையினரிடம் தெரிவிக்க மறுத்தது தெரிய வந்தால் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!