கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி – மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார்.பின்பு, சுமார் 6மணி அளவில் பேரணி துவங்கும் இடமான சாய்பாபா கோவில் சந்திப்பிற்கு பிரதமர் வந்தடைந்தார்.
பாஜகவினரின் உற்சாக வரவேற்போடு அங்கிருந்து பேரணி துவங்கியது. இந்த பேரணியின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சாலையின் இருபுறமும் மேலதாளங்கள் முழங்க மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பேரணியின் நிறைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே, 1998 ஆம் ஆண்டு
கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மலரஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், ஹெச்.ராஜா, சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வு 7.20 க்கு நிறைவுற்றது.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று இரவு பிரதமர் கோவை ரேஸ் கோர்ஸ் – ல் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.நாளை செவ்வாய்க்கிழமை காலை கோயம்புத்தூரிலிருந்து கேரளா புறப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சிக்காக கோவை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பேரணி நடைபெறும் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.