கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி காவிரி ஆற்றப்படுகையில் கடந்த 5ம் தேதி மேல தண்ணீர்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து கரூர் எஸ் பி பிரபாகர், குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், குளித்தலை இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் குளித்தலை இன்ஸ்பெக்டர் இளங்கோ, எஸ் ஐ பிரபாகர் அடங்கிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் சீனிவாசனை, கீழ தண்ணீர்பள்ளியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் கொலை செய்தது ல் தெரியவந்தது.
சீனிவாசன் காவிரி ஆற்றில் குளிக்க செல்லும் போது அங்கு பிரபாகரன் மீன் பிடித்து கொண்டு இருந்ததாக தெரியவந்தது. அதன் அடிப்படையில் பிரபாகரனிடம் விசாரணையை தொடங்கினர்.
எலக்ட்ரீசியன் பிளம்பர் வேலைக்கு சென்று கொண்டிருந்த பிரபாகரன், தற்போது வேலைக்கு செல்லாமல் கஞ்சா, மது போதைக்கு அடிமையானார். அவ்வப்போது காவிரி ஆற்றில் மீன் பிடித்து விற்பனை செய்து வந்ததாராம்.
காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஆறு மாத பெண் குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வருவதாகவும், சரிவர வேலை கிடைக்காதால் வருமானம் இன்றி தவித்து வந்தாராம்.
கையில் பணம் இல்லாததால், சாப்பிடவும் வழிஇன்றி, போதைக்கு வழிஇன்றி தவித்தாராம். அப்போது ஆற்றுக்கு குளிக்க வந்த சீனிவாசன் கையில் தங்க மோதிரம் அணிந்திருப்பதை கவனித்த பிரபாகரன், சீனிவாசனை கொன்று மோதிரத்தை திருடிக்கொண்டால் சில நாட்கள் நன்றாக சாப்பிடலாம் என கருதினார்.
துணிகளை துவைத்து கொண்டிருந்த சீனிவாசனின் பின்பக்கமாக சென்ற பிரபாகரன், மீன் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் சூரி கத்தியால் சீனிவாசனின் கழுத்தை அறுத்தும் முதுகிலும், தோள்பட்டையிலும் சரமாரியாக குத்தினார். இதில் அவர் இறந்தார். பின்னர் மோதிரத்தை கழற்றி எடுத்துக்கொண்டு சீனிவாசன் உடலை அருகில் உள்ள மணல் திட்டின் அடியில் அரைகுறையாக புதைத்து விட்டார். அதன் பிறகும் அவர் மீன்பிடித்துக்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் சீனிவாசன் கொலை செய்யப்பட்டதை அறிந்து போலீசார் ஆற்றுக்கு வந்து தேடத்தொடங்கினர். அப்போதும் பிரபாகரன் அங்கு நின்று என்ன நடக்கிறது என்பதை கவனித்தார். திடீரென மோப்பநாய் அங்கு வரவழைக்கப்பட்டதும், பிரபாகரன் நழுவி சென்று விட்டார். பின்னர் போலீசார் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்தபோது இங்கு ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்தார் என தெரிவித்து உள்ளனர். அதன் பேரில் பிரபாகரனை பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையை கக்கிவிட்டார். பின்னர் அவரை கைது செய்து மோதிரத்தை மீட்டனர். அவரை கோர்ட்டில் ஆஜர் செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.