லடாக்: கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் தினமும் 90 மில்லியன் லிட்டர் பனிப்பாறை உருகுநீரை லடாக் யூனியன் பிரதேசம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. நிலையான நீர் மற்றும் விவசாய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த முயற்சியில் லடாக் இறங்கியுள்ளது.
லடாக் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவின் முயற்சியால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக முன்பு ஸ்டோக் கிராம நல்லா பகுதியில் இருந்து வீணாக சிந்து நதியில் கலந்த பனிப்பாறை நீர், தற்போது இகூ-பே பாசனக் கால்வாய்க்கு (Igoo-Phey Irrigation Canal) வெற்றிகரமாக திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால் சுற்றியுள்ள 12 கிராமங்களுக்கு தினமும் தடையற்ற பாசன நீர் கிடைக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தரிசாகக் கிடந்த சுமார் 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் இதன் மூலம் மீண்டும் விளைநிலங்களாக மாறும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, லடாக்கில் தண்ணீரைச் சேமிக்க Him Sarovar திட்டத்தின் கீழ் செயற்கை ஏரிகளும், ஐஸ் ஸ்தூபி போன்ற செயற்கை பனிப்பாறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
