கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கரூரிலிருந்து வேலூருக்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி வேலாயுதம்பாளையம் அருகே வந்தபோது திடீரென தீப்பற்றியது. லாரியின் முன் பகுதியில் இருந்து புகை வருவதை கண்ட ஓட்டுநர் லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிப் பார்த்தபோது லாரியில் தீ மளமளவென எரியத் தொடங்கியது. அதனைக் கண்டு
அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த வேலாயுதம் பாளையம் தீயணைப்புத் துறையினர் லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.