திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் உள்ள 42 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக, கூச் பெஹர், அலிபுர்துவார்ஸ், ஜல்பைகுரி ஆகிய தொகுதிகளுக்கு நாளை வாக்குபதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை ராஜ்யசபா எம்.பி., டெரெக் ஓ பிரையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று கோல்கட்டாவில் வெளியிட்டனர்.
‘தீதியின் வாக்குறுதிகள்’ என்ற பெயரில் ஆங்கிலம், இந்தி, உருது, வங்காளம், நேபாளம், சந்தால் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
* அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் இலவச வீட்டு வசதி
* வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களுக்கு, ஆண்டுதோறும் 10 இலவச காஸ் சிலிண்டர்கள்
* அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வீட்டு வாசலில் இலவச ரேஷன் பொருட்கள் வினியோகம்
*ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள்
* எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்
* தேசிய ஊரக வேலை அட்டை வைத்திருப்பவர்களுக்கு, நாள்தோறும் 400 ரூபாய் ஊதியத்துடன் நுாறு நாள் வேலைக்கான உத்தரவாதம்
* 25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளமா முடித்தவர்களுக்கு பயிற்சி
* ஓ.பி.சி., – எஸ்.சி., – எஸ்.டி., சமூக மாணவர்களின் உயர்கல்விக்கான உதவித்தொகை மூன்று மடங்கு உயர்த்தப்படும்
* மூத்த குடிமக்களின் ஓய்வூதியம், 1,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்
* சி.ஏ.ஏ., சட்டம் ரத்து செய்யப்படும்; நாட்டில் பொது சிவில் சட்டம் இருக்காது
என பல்வேறு சலுகைகளை வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..