கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை மறுநாள்) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 6 மணி அளவில் வயநாடு தொகுதிக்குட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் 4 பேர் வந்தனர். இந்த கிராமத்தில் தமிழர்களும் அதிக அளவில் வசிக்கிறார்கள். பெரும்பாலும் இங்கு தோட்ட தொழிலாளர்கள் வசிக்கிறார்கள்.
ஆயுதம் தாங்கிய அந்த மாவோயிஸ்டுகள், பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய அவர்கள் எல்லோரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர். பொதுமக்களிடம் தங்களது கருத்துக்களை வெகுநேரம் தெரிவித்தப்படி இருந்த மாவோயிஸ்டுகள் பின்பு அங்கிருந்து புறப்பட்டு மக்கிமாலா தேயிலை தோட்ட பகுதிக்குள் நுழைந்து வனப்பகுதிக்குள் சென்றனர். இது தொடர்பாக உள்ளூர் இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீடியோவில் இருந்த காட்சிகளை கொண்டு மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகள் யார், அவர்களது பெயர் போன்ற விவரங்கள் தெரியவந்துள்ளது.
மாவோயிஸ்டுகள் பகிரங்க மிரட்டல் விடுத்ததன் காரணமாக வயநாடு தொகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.