Skip to content
Home » எடப்பாடியை வரவேற்க சென்ற பள்ளி மாணவன்… கடலில் மூழ்கி பலி…

எடப்பாடியை வரவேற்க சென்ற பள்ளி மாணவன்… கடலில் மூழ்கி பலி…

மயிலாடுதுறை மாவட்டம்,  சீர்காழி பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பஜ்ருதீன் மகன் நிசாருதீன் (14). இந்த மாணவர் அப்பகுதி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அத்துடன் சிலம்பம் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சீர்காழிக்கு நேற்று வருகை தந்தார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக சிலம்பாட்ட பயிற்றுனர் தினேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் 30 பேர் சிலம்பம் சுற்றி அவரை வரவேற்றனர்.

பின்னர் சிலம்பாட்டக் குழுவினர், நேற்று மாலை கொள்ளிடம் அருகேயுள்ள  கூழையாறு கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அலையில் சிக்கி நிசாருதீன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது சக மாணவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும்  முடியவில்லை.  அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் மாணவரை  தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் அவரது உடல் சற்று தூரத்தில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த திருமுல்லைவாசல் கடலோர காவல்படை போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.  நிசாருதீன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  எடப்பாடி பழனிசாமிக்கு  வரவேற்பு கொடுப்பதற்காகச் சென்ற பள்ளிச் சிறுவன் சடலமாக திரும்பி வந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள்  பெரும் சோகம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!