திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்துரை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க வின் பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
ஆயிரம் கொடி இருந்தாலும் திமுக கொடி போல் எதுவும் இல்லை. அதை பார்க்கும் போதே ஒரு மகிழ்ச்சி வருகிறது.திருச்சியில் சற்று முன்னர் 100 அடியில் கொடியை ஏற்றினேன். கண்டிப்பாக அசந்து போனேன் .எதையும் சாதிக்கும் திறமை அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு இருக்கிறது.ஆனால் எதுவும் தெரியாதாது போல் நடிக்கும் திறமையும் அவரிடம் உள்ளது.
திமுகவே முதன் முதலில் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்து அறிவிக்கப்பட்ட இடமும் திருச்சி தான்.
அன்பிலார், பொய்யாமொழி ஆகியோர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் நான் பேசி உள்ளேன். தற்போது மூன்றாவது தலைமுறையான மகேஸ் ஏற்பாடு செய்த கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளேன்.
தமிழகத்தின் தலைநகர் மத்தியில் இருக்க வேண்டும் என்றால் அது திருச்சி தான் .அப்படியும் காலம் வரும்.இயக்கத்தின் உயிர் நாடியே தொண்டர்கள் தான்.மற்ற கட்சிகளில் உயிர் நாடி உயிரோடு இல்லை.நம் இயக்கத்தின் மீது வீசிய புயல் இமயமலை மீது வீசியிருந்தால் இமயமலை சுக்குநூறாகியிருக்கும்.
ஒவ்வொரு தி.மு.க தொண்டனும் கட்சியின் காவல் தெய்வங்கள்.இந்தியாவில் எமர்ஜெண்சியை எதிர்த்து தீர்மானம் இயற்றிய ஒரே கட்சி திமுக தான்.
தலைவரின் பெயரை, கட்சியை காப்பாற்றுவாரா நம் தளபதி என்று எண்ணினேன். ஒவ்வொரு இடத்திலும் உற்று நோக்குவேன்,இதை நான் ஸ்டாலிடமும் கூறி இருக்கிறேன். ஆனால் அவர் சிறப்பாக செயல்பட்டு காட்டினார்.கட்சி தான் முதல், பின்னர் தான் பாசம் , குடும்பம் எல்லாம் .அப்படி தான் கலைஞர் இருந்தார்.
உரசி பார்க்கும் குணம் மகேஸ்க்கு இல்லை ,ஒதுங்கி போகிற குணம் உள்ளது – நல்ல பண்பாடு அவரிடமும் உள்ளது,வாத்தியார்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம்.இளம் வயதாக இருந்தாலும் ஆசிரியர்
போராட்டத்தை இனிமையாக முடித்து வைத்து விட்டார். நான் எவ்வளவு நாள் இருப்பேனோ தெரிய வில்லை ஆனால் எனக்கு பின்னாலும் கட்சி கண்டிப்பாக ஓகோ என்று இருக்கும் – நான் நிம்மதியாக இருப்பேன்.தற்போதைய திமுக தலைமை வருங்கால தலைமையை உருவாக்குமே ஆனால் அந்த தலைமையை நான் தலைமேல் வைத்து தாங்குவேன்.
ஒட்டு மொத்த திமுகவில் உனக்கென்று ஒரு இடம் இருக்கும் உனக்கென்று ஒரு நாடு இருக்கும்,அதில் திமுக கொடி இருக்கும்.
இவ்வாறு துரைமுருகன் பேசினார். கூட்டத்திற்கு அமைச்சர் மகேஸ் தலைமை தாங்கினார்.
திருச்சியில் அமைச்சர்கள் நேரு, மகேஸ் இடையே கட்சிக்குள் மவுன யுத்தம் நடந்து வரும் நிலையில், உரசி பார்க்கும் குணம் மகேஸ்க்கு இல்லை, ஒதுங்கி போகிற குணம் உள்ளது என அமைச்சர் துரைமுருகன் மகேசை பாராட்டி பேசியது, அமைச்சர் நேருவை மனதில் வைத்து தான் பேசியதாக திமுக தொண்டர்கள் பேசிக்கொண்டனர். கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் திருச்சி வந்த நிலையில், அவரை அமைச்சர்நேரு வரவேற்காமல், தஞ்சை மாவட்ட நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் கோபத்தில் இருந்த துரைமுருகன் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.