கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கேப்டன் மறைந்த செய்தி கேட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டதுடன் உடனடியாக என்னை மத்திய அரசு சார்பாக கிளம்பி போக சொன்னார். இந்த துயரில் பங்கேற்க அறிவுறுத்தினார். அதனால் உடனே கிளம்பி வந்தேன். மனதுக்கு வேதனை தரும் கூட்டத்தில் கலந்து கொண்டேன். பிரதமர் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன்.
மக்களுக்காக பாடுபடவர் கேப்டன். சாப்பாடு போடாமல் அனுப்ப மாட்டார் என்பதை திரும்ப திரும்ப சொல்ல தேவையே இல்லை. தமக்கு கிடைத்த வசதிகள் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்தவர். பாகுபாடு இல்லாமல் எல்லோரும் மனிதர்கள் என்ற மனிதநேயத்துடன் இருந்த அரசியல்வாதி. இப்படி ஒரு அரசியல் தலைவரை பார்க்க முடிந்தது. அப்படி உயர்ந்த குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் நம்மிடையே இல்லை. துயரத்தை எப்படி வெளிப்படுத்த என்று தெரியவில்லை. வெயில், மழையை பொருட்படுத்தாமல் கோடானு கோடி ரசிகர்கள், தொண்டர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொண்டேன். அதே துக்கத்துடன் என்னை இங்கே வர சொல்லி பிரதமர் உத்தரவிட்டார். குடும்பத்தார், சுதீஷ், இரு மகன்களுக்கும், பிரேமலதாவுக்கும் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.