அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை பெருமாள் சாமி இன்று காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார். அவரது உடல் அடக்கம் முத்தூர் வேலம்பாளையத்தில் உள்ள அவரது தோட்டத்தில் நடக்கிறது.
அமைச்சரின் தந்தை மறைவு செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதனுக்கு ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் அருமைத் தந்தை முத்தூர் சா.பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.
தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார். பெருமாள்சாமி அவர்களது குடும்பத்தினருக்கும்உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.