Skip to content
Home » அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி விசாரணை நாளை ஒத்திவைப்பு…

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி விசாரணை நாளை ஒத்திவைப்பு…

சென்னை, சட்ட விரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். 2  நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3-வது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கை கடந்த 7ம் தேதி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். இந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பிலும், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி வழக்கை வரும் 11-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து இன்றைய தினம், அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வில் விசாரணை துவங்கியது. செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் வழக்கறிஞர் கபில்சிபல் காணொளி வாயிலாக ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் வழங்கியிருந்தாலும், புலன் விசாரணை அதிகாரம் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்குதான் உள்ளது எனவும் குற்றம் புரிந்தவன் மூலம் பெற்ற பணத்தை வைத்ததாகவோ, மறைந்ததாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் மேகலா தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? என்பது குறித்து இரு தரப்பும் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!