Skip to content
Home » பள்ளிக்கு ரூ.4 கோடி நிலம் தானம்….. ஆயி இல்லம் சென்று பாராட்டிய அமைச்சர் உதயநிதி

பள்ளிக்கு ரூ.4 கோடி நிலம் தானம்….. ஆயி இல்லம் சென்று பாராட்டிய அமைச்சர் உதயநிதி

  • by Senthil

மதுரை மேலூர் அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் உக்கிரபாண்டியன். இவர்களது மகள் ஜனனி. தனது மகள் ஜனனி 2 ஆண்டுக்கு முன்பு இறந்தபோது அளித்த வாக்கின்படி தற்போது தாம் பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக ரூ.4

கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார் வங்கி ஊழியரான பூரணம்.அதற்கான பத்திரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகாவிடம் வழங்கினார்.

இதுகுறித்து வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் கூறியது: “நான் பிறந்தது கொடிக்குளம். அப்பா எனக்கு வழங்கியது ஒன்றரை ஏக்கர் நிலம். எனது கணவர் உக்கிரபாண்டியன் கனரா வங்கி ஊழியர். எனது மகள் ஜனனிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது எனது கணவர் 31 ஆண்டுக்கு முன்பு விபத்தில் இறந்தார். எனது மகளை பி.காம் வரை படிக்க

வைத்து 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தேன். குடும்பப் பிரச்சினையால் எனது மகள் இறந்தபோது நல்ல காரியங்கள், தான தர்மங்கள் செய்யுமாறு கூறினார். எனது கணவர் இறந்தபோது எனது மகளுக்காகவே வாழ்ந்தேன்.

எனது மகள் இறந்தபோது யாருக்காக வாழ்வது என நினைத்தேன். அவர் சொன்னதுபோல் தான, தர்மங்கள் செய்யவே வாழ்ந்து வருகிறேன். கடந்த 1998-ல் எனது சகோதரருக்காக ஒரு கிட்னியும் வழங்கி ஒரு கிட்னியுடன் வாழ்ந்துவருகிறேன். எனது மகள் சொன்னபடி கொடிக்குளம் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளேன். இதன் மூலம் எனது மகள் உயிருடன் வாழ்வதாக நினைக்கிறேன். வெளியில் தெரியாமல் பல தர்ம காரியங்கள் செய்துவருகிறேன்” என்றார்.

4 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய ஆயியை முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார்.  வரும் 26ம் தேதி சென்னை குடியரசு தின விழாவில்  ஆயி கவுரவிக்கப்படுவார் என்றும் முதல்வர் அறிவித்தார். இந்த நிலையில் இன்று மதுரை வந்த விளையாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி,  ஆயி இல்லத்துக்கு சென்று  பொன்னாடை அணிவித்து அவரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.  பின்னர் சிறிது நேரம் அவருடன் உரையாடிக்கொண்டு இருந்தார்.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்  மூர்த்தி மற்றும் ஆயி குடும்பத்தினர் பங்கேற்றனர். ஆயி அம்மாளை சந்தித்தது குறித்து  அமைச்சர் உதயநிதி கூறும்போது, ஆயி அம்மாளின் பணி காலத்திற்கும் நிலைத்து நிற்கும்  என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!