16 வயது சிறுவன் ஒருவன் கொள்ளையடிக்க சென்ற இடத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். வடமேற்கு டில்லியின் அசோக் விஹார் பகுதியில் ஒரு குடும்பத்தினர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அந்த கட்டுமான பகுதியில் ஒரு தற்காலிக வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் அந்த வீட்டிற்குள் கொள்ளையடிக்கும் நோக்கில் சென்ற சிறுவன் ஒருவன் வீட்டில் தனியாக இருந்த இரு சிறுமிகளை கண்டான். அந்த சிறுமிகளுக்கும் இவன் வயதுதான் இருக்கும். கொள்ளையடிக்க சென்ற சிறுவன், சிறுமிகளைக் கத்தியைக் காட்டி மிரட்டி, சிறுமி ஒருவரை கட்டிடத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த கட்டிடத்தில் கூலி வேலை செய்த சிறுமியின் பெற்றோர் ஊதியம் பெறுவதற்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்தை சிறுமி, பெற்றோரிடம் கூறியபோது அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைதுசெய்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.