நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டு மக்களுக்கு உழைக்க அவர்கள் அருளாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வா போல நெல்லை மக்கள் மிகவும் இனிப்பானவர்கள். தமிழக மக்கள் பாஜகவை நேசிக்கிறார்கள். உங்கள் நம்பிக்கையை பாஜக காப்பாற்றும். இது மோடியின் உத்தரவாதம்.
தமிழ் மக்கள் எதிர்காலம் பற்றி தெளிவாக இருப்பார்கள். தமிழ் மக்களின் சிந்தனையும், பாஜக சிந்தனையும் ஒன்று போல உள்ளது. எரிசக்தி துறையில் வெளிநாடுகளுடன் நாம் போட்டி போடுகிறோம். தமிழ்நாடும் இந்த வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்க போகிறது.
வெளிநாட்டில் இந்தியர்களை பெருமையாக பார்க்கிறார்கள். வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு மதிப்பு கிடைக்கிறது. மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது என்பதால் அப்படி பார்க்கிறார்கள். பாஜகவின் சித்தாந்தம் தமிழ் மக்களுடன் ஒத்துபோகிறது. இதனால் தமிழக மக்கள் பாஜக பின் வரத் தொடங்கி உள்ளனர்.
இப்போது டில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள தூரம் குறைந்து விட்டது. ஒவ்வொருவருக்கான திட்டங்களும் தென் தமிழகம் வரை பரவி உள்ளது. 1 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளோம். இலவசமாக 40 லட்சம் பெண்களுக்கு எரிவாயு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் நான் போகிற இடங்கள் எல்லாம் பெண்கள் வந்து ஆசி வழங்குகிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் கடைகோடி வரை செல்கிறது.
தமிழ் மக்களிடம் நாங்கள் பாரபட்சம் காட்டவில்லை. இந்தியா 100 மடங்கு முன்னேறினால், தமிழகமும் 100 மடங்கு முன்னேற வேண்டும். எங்களுக்கு ஒத்துழைப்பே கொடுக்காத அரசு இங்கு நடக்கி்றது. எங்கள் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. ஏன் இவர்கள் எங்கள் திட்டங்களை தடுக்கிறார்கள். நாட்டை கொள்ளையடிக்க வளர்ச்சி திட்டங்களை தடுக்கிறார்கள். ஆனால் மோடி அதை தடுத்து நிறுத்துவார்.
தமிழ்நாட்டுக்கும், ராமருக்கும் என்ன சம்பந்தம் என்கிறார்கள். ராமர் கோயிலுக்கு நன்றி தீர்மானம் கொண்டு வரும்போது, நாடாளுமன்றத்தில்திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்கிறார்கள். நாங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு தலித்தை அமைச்சர் ஆக்கி உள்ளோம். இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து அவரை எம்.பி. ஆக்கி உள்ளோம். எங்களுக்கு நாடு தான் முக்கியம்.
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்டு கொண்டு வந்தோம். பாகிஸ்தானில் போய் விழுந்த விமானப்படை வீரர் அபிநந்தனை சிறு காயமின்றி மீட்டோம். மோடியை மீறி யாரும் இந்தியன் மீது கை வைக்க முடியாது. திமுக பொய் வேஷம் போடுகிறது. பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது. இனி திமுக இருக்காது. உங்களை சிறுமைப்படுத்தும் திமுக இங்கிருந்து அகற்றப்படும். திமுகவை தேடினாலும் கிடைக்காது.
இன்றைக்கு திமுக ஒரு விளம்பரம் போட்டு உள்ளது. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள விளம்பரத்தில் சீனா கொடி, சீனா ராக்கெட் பறப்பது போன்று படம் போட்டு உள்ளனர். அந்த அளவுக்கு தான் அவர்களுக்கு நாட்டுப்பற்று உள்ளது. வந்தே பாரத் ரயில் விட்ட பிறகு தான் உங்கள் பகுதி முன்னேறி உள்ளது.
தென்னிந்திய மக்கள் பிரச்னை எங்களுக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு என்ன தேவையோ அதை பாஜக செய்யும். அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டம் எங்களிடம் உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
2024 தேர்தலில் வளர்ச்சி, தொலைநோக்கு பார்வையுடன் பாஜக நிற்கிறது திமுக, காங்கிரஸ் எதிரணியில் நிற்கிறது. அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்காக நிற்கிறார்கள். அவர்கள் குடும்பவாரிசு அரசியல் செய்கிறார்கள். அப்பாவுக்கு பின்னர் பிள்ளை என வருகி்றார்கள். அவர்கள் நாட்டு மக்களைப்பற்றி கவலை கொள்வதில்லை. அவர்கள் மக்களை பிரித்தாளுகிறார்கள். தேசத்தை அவர்கள் ஒன்றுபடுத்துவதில்லை. அவர்கள் சுயநலத்தை அடக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. குடும்பத்தை பற்றி நினைப்பவர்களை தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டும். எனக்கு நீங்கள் தான் முக்கியம்.
நான் தமிழ் மொழியில் பேசமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனாலும் நீங்கள் என்மனதை புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையை தெரிந்து கொண்டேன். நீங்கள் எனக்கு ஆசி கூறுங்கள் ,வாழ்த்து கூறுங்கள். அடுத்த ஆட்சி பாஜக ஆட்சி என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்து விட்டது. நீங்கள் எல்லோரும் மக்களிடம் பேசி பாஜகவுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் நமக்கு 400 சீட் கிடைக்கும். நீங்கள் எத்தனை மடங்கு உழைக்கிறீர்களோ, அதை விட ஒரு மடங்கு அதிகமாக நான் உழைப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார். அவரது இந்தி உரை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. மொத்தத்தில் அவரது உரை 48 நிமிடங்கள் இடம் பெற்றது.