நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசனில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சீமான் ஆஜராகாத காரணத்தினால், அவரது வீட்டு கதவில் போலீசார் சம்மனை நேற்று காலை ஒட்டினர். அந்த சம்மனை, அங்கிருந்த நபர் ஒருவரும் காவலாளி அமல்ராஜூயும் கிழித்தனர். இதனால், அங்கு போலீசாருக்கும், காவலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் தலைமையிலான போலீசார், அங்கு வந்து அமல்ராஜ் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். கதவை திறந்து கொண்டு இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தபோது, பாதுகாவலர் தடுத்தது, அவரை மடக்கி இழுத்து வெளியே கொண்டு வந்து ஜீப்பில் ஏற்றியது, சீமான் மனைவி கயல்விழி சாரி சார் என கூறியது போதும் என்ன சாரி என கோபமாக கேட்டு விட்டு ஜீப்பில் ஏறி சென்றார் இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் இந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாகின. சீமான் வீட்டிற்குள் புகுந்து அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் ஒரே நாளில் பிரபலமானார். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் யார்? என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிரவின் ராஜேஷின் தந்தை ராஜகுரு. இவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார். இவர், முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை சம்பவத்தின் போது உயிரிழந்தவர். அப்போது, பிரவின் ராஜேஷின் வயது 16. தந்தை மரணத்தை பார்த்ததும், நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் போலீஸ் வேலைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீமான் வீட்டில் அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர் யார் தெரியுமா?
