Skip to content
Home » புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….

புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….

  • by Senthil

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(28). இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்குத் திருமணமாகி 6 மாதங்களாகிறது. செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இதன் பின் மதுபோதையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் அண்ணாநகர் இரண்டாவது அவென்யூவில் உள்ள ஃபுட் கோட்டிற்கு சாப்பிடச்சென்றுள்ளார்.

அவருடன் வந்த நண்பர்கள் ஓட்டலில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது, வெளியே உள்ள கடையில் செந்தில்குமார் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிரகாஷ் என்பவருடன் செந்தில் குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனைப் பார்த்த பிரகாஷின் நண்பர்கள் மணிமாறன், ரோஷன், ராஜேஷ் ஆகியோர் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கினர். உடனே அங்கிருந்த செந்தில்குமாரின் நண்பர்களும் எதிர் தரப்பினரை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் செந்தில்குமார் படுகாயமடைந்தார். உடனே அவரை அவரது நண்பர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவருக்கு அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டது. அத்துடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அங்கேயே அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், செந்தில்குமார் மரணமடைந்தது தெரியாமல் பிரகாஷின் நண்பர்கள் மணிமாறன் ,ரோஷன் ஆகிய இருவரும் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அதற்குள் செந்தில்குமார் உயிரிழந்த தகவல் போலீஸாருக்குத் தெரியவர மணிமாறன் , ரோஷன் இருவரையும் பிடித்து திருமங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த திருமங்கலம் போலீஸார் மணிமாறன் மற்றும் ரோஷனை கைது செய்தனர். அவர்கள் கைதான விவரம் அறிந்து தலைமறைவான பிரகாஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிறந்த நாளுக்கு ட்ரீட் கொடுக்க சென்ற இடத்தில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும், ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!