ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தையும், 27 வயதுடைய மகளும் ரயிலில் ஓசூர் சென்று கொண்டிருந்தனர். ரயிலில் தந்தையுடன் சென்ற இளம்பெண் ஓசூரில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுவிட்டு , பின்னர் நேற்று ராமநாதபுரம்- ஹூப்ளி வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயிலில் தந்தையுடன் ஓசூர் சென்று கொண்டிருந்தார்.
இந்த ரயில் சேலம் அருகே வந்து கொண்டிருந்த போது, இளம்பெண்ணின் இருக்கைக்கு மேல் இருக்கையில் படுத்திருந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கீழே இறங்கியுள்ளார். அப்போது கீழ் இருக்கையில் படுத்திருந்த இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டவுடன், அவருடைய தந்தை உள்ளிட்ட சக ரயில் பயணிகள் , சம்பந்தப்பட்டவரை பிடித்து கேள்வி எழுப்பினர். பின்னர் இது குறித்து ரயில் பயண சீட்டு பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட நபரை ரயில் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஜங்சன் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் சிவ.செந்தில் குமார் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை செய்த போது, அவரது பெயர் சையது இப்ராஹிம் ( வயது 57) என்றும் சேலம் சூரமங்கலம் அருகே உள்ள பாரதிநகரை சேர்ந்தவர் என்றும், சேலம் அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்றும் தெரியவந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில், கல்லூரி உதவி பேராசிரியர் சையது இப்ராஹிம் மீது பாலியல் சில்மிஷம் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் . பிறகு சையது இப்ராஹிம் நேற்று இரவு சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.