அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் உடனடியாக மேல்முறையீடு செய்தனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மட்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரது மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வரவில்லை. இதுகுறித்து நீதிபதிகளிடம், அவர்களது வக்கீல்கள் முறையிட்டனர். இதையடுத்து அனைத்து வழக்குளையும், இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இன்று டிவிசன் பெஞ்சில் விசாரணை நடந்தது.
இருதரப்பினரும் தங்கள் வாதங்களை வைத்தனர். அதிமுக விதிப்படி தான் பொதுச்செயலாளர் தேர்வாகி உள்ளார். 95% பேர் எடப்பாடியை ஆதரிக்கிறார்கள். நோட்டீஸ் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளது. சட்டமன்றத்தில் ஓபிஎஸ் இடத்தை மாற்ற வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்துள்ளோம்என எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகி விட்டதாக எந்த கோர்ட்டும் கூறவில்லை. விதிகளை திருத்தாமல் இருந்திருந்தால் ஓபிஎஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டிருப்பார்என அவரது தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஓபிஎஸ் மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் . குறிப்பிட்ட காலத்திற்குள் பிரதான வழக்கை முடிக்கலாம் எனக் கூறி வழக்கை வரும் 3ம் தேதிக்கு(திங்கள்) தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.