Skip to content
Home » தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி… கணவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு…

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி… கணவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு…

சென்னை செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பாலகணேசன் நகரை சேர்ந்தவர் அஜித் (27). இவரது மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு திருமணமாகி 2  வருடம் ஆகிறது. சுகன்யா கர்ப்பிணியானதை அடுத்து முதல் 5 மாதம் புழல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில் சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள WCF என்ற தனியார் ஆஸ்பத்திரி தனது இன்ஸ்டாவில் பிரசவத்தின் போது பெண்ணின் கணவர் உடன் இருந்து பிரசவத்தை பார்த்து கொள்ளலாம் என்ற விளம்பரத்தை பார்த்து சுகன்யா தன் கணவரும் உடன் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

சுகன்யா
சுகன்யா

மனைவியின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய அஜித் தனது மனைவி சுகன்யாவை கடந்த  4 மாதமாக சென்னை தி.நகரில் உள்ள WCF ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு அழைத்து சென்று வந்துள்ளார். பின்னர் இங்கே மனைவிக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்த நிலையில், கடந்த 16ம் தேதி அஜித்தின் மனைவி சுகன்யாவிற்கு பிரசவவலி ஏற்படவே அன்று மதியம் தி.நகரில் உள்ள WCF ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். அங்கு டாக்டர்கள் சுகன்யாவுக்கு சில மருந்துகளை ஊசியில் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பின்பு சுகன்யாவிற்கு தொடர்ச்சியாக வலிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தொடர்ந்து அவருக்கு வலிப்பு ஏற்பட்டு வந்ததால் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்துள்ளனர். பின்னர் சுகன்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் சுகன்யா சுயநினைவு இன்றி இருந்ததால் நிலைமையை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும் வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பார்க்கும்படி  ஆஸ்பத்திரி நிர்வாகம் சுகன்யாவின் கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளது.

வேறு வழியின்றி அஜித், தனது மனைவியின் உயிரை காப்பாற்ற WCF மருத்துவர்கள் பரிந்துரைத்தது போல் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர்  ஆஸ்பத்திரியில் அனுமதித்ததை அடுத்து அங்கு சுயநினைவு இன்றி இருந்த சுகன்யாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சுகன்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சுகன்யாவிற்கு பிறந்த ஆண் குழந்தையின் உடல் நிலையும் மோசமானதால் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அஜித் மற்றும் அவரது உறவினர்கள் WCF மருத்துவமனையில் முறையான மருத்துவம் பார்க்காமல் தவறான சிகிச்சை அளித்ததே சுகன்யா உயிரிழப்பிற்கு காரணம் எனக்கூறி தி.நகரில் உள்ள WCF மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுகன்யாவின் உறவினர்களை அழைத்து மருத்துவமனை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சுகன்யாவின் கணவர் அஜித் சாலையில் சென்ற லாரி முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது‌. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உடனே பிரேக் பிடித்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தவறான சிகிச்சை அளித்து தனது மனைவி உயிரிழப்பிற்கு காரணமான சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அஜித் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து பெண்ணின் உறவினர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!