Skip to content
Home » தெரு நாய்களுக்கு உணவளிப்பதை தடுத்தால் வழக்குப்பதிவு … போலீஸ் எச்சரிக்கை….

தெரு நாய்களுக்கு உணவளிப்பதை தடுத்தால் வழக்குப்பதிவு … போலீஸ் எச்சரிக்கை….

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் அப்பகுதியில் வீட்டுவேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு உணவளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக வந்துள்ள சில குடியிருப்பு வாசிகள் ஜெனிஃபரிடம் தெரு நாய்களுக்கு எல்லாம் உணவளிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இதனால் விலங்குகள் ஆர்வலர் செலீனா என்பவரின் உதவியுடன் ஜெனிஃபர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் அப்புகார் குறித்து காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து ஜெனிஃபரை விசாரிக்க அழைத்துள்ளனர். அதற்காக ஜெனிஃபர் மற்றும் செலீனா ஆகிய இருவரும் வருகை தந்தனர்.

விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெனிஃபர், நாய்களுக்கு உணவளிக்கலாம் என காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கூறிவிட்டதாகவும் அதே சமயம் குழந்தைகள் விளையாடுகின்ற இடத்தில் உணவளிக்காமல் இதர இடங்களில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இரவு 10 மணிக்கு மேல் உணவளிக்கலாம்

என கூறியதாக தெரிவித்தார். மேலும் நாய்களுக்கு உணவளிப்பவர்களை யாரும் அச்சமுறுத்த கூடாது என கூறியதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செலீனா, இரவு நேரத்தில் நாய்களுக்கு உணவளிப்பது சரிதான் என காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் கூறியதாகவும், யாரும் உங்களை தடுக்க கூடாது பயமுறுத்த கூடாது என சில சட்டங்களை கூறியதாக தெரிவித்தார். மேலும் யாரேனும் தடுத்தால் அவர்கள் மீது வழக்கு பதியப்படும் என அதிகாரிகள் கூறியதாகவும் தெரிவித்தார்.

காவல் ஆணையாளரை சந்திப்பதற்கு முன் பேட்டியளித்த செலீனா, இத்தனை நாட்களாக அங்கு எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும் ஆனால் தற்போது புதிதாக குடிவந்த ஒருசில நபர்கள் நாய்களுக்கு உணவளிக்க கூடாது என தெரிவிப்பதாகவும், வசதியாக இருக்கும் இடத்தில் இது போன்று அசிங்கமான விஷயங்களை செய்ய கூடாது என கூறிவதாக தெரிவித்தார். மேலும் இவ்வாறு செய்தால் திருட்டு பட்டம் கட்டிவிடுவோம் என மிரட்டியதாக தெரிவித்தார். மேலும் அவர்கள் சில நாய்களை வாகனங்களை ஏற்றி கொன்றிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியதாகவும் இது குறித்தும் ஜெனிஃபர் போலிசாரிடம் கூறிய போது சம்பந்தப்பட்டவர்கள் ஜெனிஃபர் மற்றும் அவரது கணவரை மிரட்டியதாக தெரிவித்தார். மேலும் ஜெனிஃபர் கோழி கழிவுகளை எல்லாம் பச்சையாக நாய்களுக்கு போடுவதாக பொய்யாக குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!