கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பெருங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த ராதா என்பவரின் மகன் நரம்பன் ரவணிகுமார் மற்றும் அவரது அக்கா மகன் சிவா. மாமனும், மருமகனும் சொந்த வேலை காரணமாக பைக்கில் சிதம்பரம் சென்றனர். பைக்கில் வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அவர்கள் பயணித்தனர். கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சிதம்பரம் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது, வாளியில் இருந்த தண்ணீரை மொண்டு இருவரின் தலையிலும் ஊற்றியபடி சென்றனர்.
வெயிலின் உக்கிரத்தை உணர்த்த இவர்கள் இப்படி செய்தாலும், இதை மக்கள் வேடிக்கையாகவே பார்த்தனர். அவர்கள் பயணத்தின்போது, நடிகர்கள் விஜய்,விஜயகாந்த், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் குரல்களில் மிமிக்ரி செய்தபடி, வெயிலின் கொடுமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய பணிகள் இன்றி வெளியில் வர வேண்டாம் என்று அவர்கள் கூறியபடி பயணித்தனர். கத்திரி வெயிலின் உக்கிரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியப்படியே அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றதால் பொதுமக்கள் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்