சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையங்கில் நடிகர் சிம்புவின் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினரை தியேட்டருக்குள் செல்ல அனுமதி மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பொதுமக்களும் பிரபலங்கள் பலரும் இந்த தீண்டாமை செயலை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், சிம்பு ரசிகர்கள் வழங்கிய
டிக்கெட்டை வைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றபோது திரையரங்கின் ஊழியர் தங்களுக்கு அனுமதி மறுத்ததாகவும் , பின்னர் அங்கிருந்த ரசிகர்கள் திரையரங்க நிர்வாகத்திற்கு எதிராக குரல் எழுப்பிய பின்னரே அனைவரையும் படம் பார்க்க அனுமதித்ததாகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர். தொடர்ந்து, ரோகிணி
திரையரங்கில் படம் பார்க்க எங்களை அனுமதிக்காது இது முதல் முறையல்ல வாரிசு துணிவு படம் பார்க்க வந்த போதும் கூட அனுமதிக்காமல் வெளியேற்றியதாக நரிக்குறவர் பெண்கள் நீலவேணி, அங்காளி ஆகியோர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் திரையரங்கு நிர்வாகத்திடம் நேரில் விசாரணை நடத்தினர் . தற்போது வரை எழுத்துப்பூர்வ புகார்கள் ஏதும் வரவில்லை, ஆனாலும் நறிகுறவர்கள் அனுமதிக்காத சம்பவம் குறித்து செய்திகளில் வந்ததை அறிந்து நேரில் விளக்கம் பெறுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே, ரோகிணி திரையங்கு நிர்வாகத்தின் மீதும் சம்பந்தப்பட்ட ஊழியர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.