Skip to content
Home » சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது….

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது….

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா தொடங்கியது. முதல் நாளான இன்று  அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதும் சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம்.இந்தாண்டுக்கான நவராத்திரி திருவிழா வருகின்ற இன்று தொடங்கியது. இதில் புரட்டாசி மாதம் அமாவாசை மற்றும் மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்கினி பாகவதம், அக்கினி புராணம், தேவி மகாமித்யம் ஆகிய புராணக் கூற்றுகளின் படி அதர்மமான மகிஷாசுரனை அழிக்க ஊசிமுனையில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு,கடை என 9 நாட்கள் கடும் தவம் புரிந்து 10 வது நாள் விஜயதசமி அன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெரு விழாவாக கொண்டாடுவது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனி சிறப்பாகும்.

நவராத்திரி நாட்களில் அம்மனுக்கு இன்று முதல் வருகின்ற 24 ந்தேதி வரை குமரிகா, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, கானகா, சண்டிகா, சாம்பவி, துர்கா,சுபத்ரா, வேடுபரி அலங்காரம் நடைபெறும். இந்த நாட்களில் அம்மனை வழிபடுவது மூலம் பக்தர்களுக்கு வறுமை ஒழியும், தனதானிய பலம் கிடைக்கும், பகை ஒழித்து கல்வி வளர்ச்சி பெற்று துன்பம் நீங்கும், செல்வ வளர்ச்சி, சேம விருத்தி, பயம் நீங்குதல், சர்வ மங்களம் அடைதல், சகலதோஷ நிவர்த்தி, சகல காரிய அனுகூலம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்க பெறும் என்பது ஐதீகம்.

நவராத்திரி திருவிழா இன்று தொடங்கி 24 ம் தேதி வரை நவராத்திரி உற்சவமும், சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாளில் அம்பாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் அடைந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நவராத்திரி உற்சவத்தில் தினமும் மாலை 4.30 சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனை நடைபெற்று மாலை 6 மணிக்கு அம்பாள் புறப்பாடாகி கோவில் மேற்கு பிரகார நவராத்திரி

மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். தினசரி இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாதாராணையும்,6 மணி முதல் 9 மணி வரை கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.இந்நிலையில் நவராத்திரி தொடக்க விழாவை முன்னிட்டு அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரகத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பகத்தரகள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.நவராத்திரி விழாவில் ஒன்பது படிகளில் 80க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது அருள்மிகு மாரியம்மன் உருவ பொம்மை, சிவன், பார்வதி,சரஸ்வதி ,லட்சுமி தேவி, பிள்ளையார், ஏழுமலையான், பூசன கலச கும்பம், மனிதர்களில் இருந்து உயர்ந்த மகான்களின் பொம்மை, அஷ்டலட்சுமிகளின் பொம்மைகள், மனிதர்கள் கடைபிடிக்கும் பழக்கமான திருமணங்கள் ,நடனம் ஆடுவது போல் உள்ள பொம்மைகள், வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!